Saturday, December 26, 2009

மைக்ரோசாப்ட்டுக்கு ரூ.1,363 கோடி அபராதம்

0 comments
காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.


‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 நன்றி: - தினகரன்

Tuesday, December 22, 2009

ஜனவரி 14-ல் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

0 comments

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கப்போகிறதாம்.  இதனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா இன்று டில்லியியில் அறிவித்துள்ளார்.

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத்  மத்திய அரசு திட்டமிட்டு, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படவும் , ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு வை(eGoM) மத்திய அரசு அமைத்துள்ளது.

தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கால அவகாசம் கோரியிருந்தது .

இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.

இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Monday, December 21, 2009

பிரிட்டனில் வரி ஏய்ப்பு செய்ததாக கூகுள் மீது புகார்

0 comments

வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.

இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.

"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.

காப்புரிமை மீறிய கூகுளுக்கு தினமும் ரூ.6.7 லட்சம் அபராதம்

0 comments
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.

காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.

இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்

0 comments
மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும்.




ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Sunday, December 20, 2009

200 வைரங்கள் பதித்த செல்போன் ரூ.15 கோடி

0 comments

உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனை இங்கிலாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 200 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அதன் விலை ரூ.14.7 கோடி. லிவர்பூலைச் சேர்ந்த தங்க நிறுவனம் கோல்டு ஸ்டிரைக்கர் இன்டர்நேஷனல். அதன் ஆர்டரின் கீழ் ஸ்டாட் ஹியூஜஸ் என்ற நிறுவனம், உலகின் விலை உயர்ந்த செல்போனை தயாரித்துள்ளது. 3ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த ஐபோனில் 200 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முற்றிலும் 22 காரட் தங்கத்தில் தயாரானது. முன்பக்கத்தில் 136 வைரங்களும், 53 வைரங்களில் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போனை தயாரிக்க 10 மாதங்கள் ஆகின. 7 கிலோ எடை கொண்ட உறுதியான கிரானைட்பேக்கிங்கில் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது. கிரானைட் கற்களில் உலகின் மிகத் தரமானதாக காஷ்மீர் கோல்டு கிரானைட் கருதப்படுகிறது. அதில் இந்த பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

Friday, December 18, 2009

இணைய உளாவியை குறிப்பு ஒட்டியாக மாற்றுதல்

0 comments



நீங்கள், உங்கள் வேலைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள சிறு தாள்களில் குறிப்பெழுதி உங்கள் மேசை மற்றும் கணினி திறையில் ஒட்டி வைப்பவரா?  அல்லது அனைத்தையும் ஒரு ஏட்டில் எழுதி வைப்பவரா அல்லது அவ்வேலைகளை செய்யும் மென்பொருளில் சேமிப்பவரா?  அப்படியானால் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு புதிய குறிப்பு ஒட்டி (ஸ்டிக்கி நோட்ஸ்) இதோ.



நீங்கள் முழு நேரமும் இணையத்தில் இருப்பவர் (வேலை நிமித்தமோ அல்லது பொழுது கழிப்பதற்கோ) என்று வைத்துக்கொள்வோம்.  இதற்காக நீங்கள் சிரமம் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.   இது ஒரு எளிமையான, இணையத்துடன் கூடிய ஒரு சிறு குறிப்பு ஒட்டி.

இதற்கென நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்என்ற கட்டாயம் இல்லை.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தொடர்பை சுட்டி (Sticky Screen) அங்கு தோன்றும் குறிப்புகளுக்கு பதில் உங்களுக்கு தேவையான குறிப்புகளை தட்டிக்கொள்ளவும். பிறகு அப்பக்கத்தை உங்கள் முகப்பு பக்கமாக சேமிக்கவும்.  அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொறு முறை புதிய டேப் கிளிக் செய்யும் பொழுதெல்லாம் இந்த குறிப்புகள் உங்கள் திறையில் தெரியும்.













Related Posts with Thumbnails