Tuesday, December 29, 2009

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்

0 comments

இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Monday, December 28, 2009

3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது

0 comments

3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆண்டு சம்பளம் 1 டாலர்

0 comments

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009-ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.

உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார்.

இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள்.

ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

Saturday, December 26, 2009

மைக்ரோசாப்ட்டுக்கு ரூ.1,363 கோடி அபராதம்

0 comments
காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.


‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 நன்றி: - தினகரன்

Tuesday, December 22, 2009

ஜனவரி 14-ல் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

0 comments

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கப்போகிறதாம்.  இதனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா இன்று டில்லியியில் அறிவித்துள்ளார்.

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத்  மத்திய அரசு திட்டமிட்டு, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படவும் , ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு வை(eGoM) மத்திய அரசு அமைத்துள்ளது.

தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கால அவகாசம் கோரியிருந்தது .

இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.

இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Monday, December 21, 2009

பிரிட்டனில் வரி ஏய்ப்பு செய்ததாக கூகுள் மீது புகார்

0 comments

வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.

இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.

"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.

காப்புரிமை மீறிய கூகுளுக்கு தினமும் ரூ.6.7 லட்சம் அபராதம்

0 comments
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.

காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.

இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.

Related Posts with Thumbnails