Friday, November 6, 2009

எஸ்எம்எஸ் கட்டணம் விரைவில் குறைகிறது

0 comments
ஒரு விநாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு செல்போனில் பேசும் கட்டணம் குறைந்ததைத் தொடர்ந்து, எஸ்எம்எஸ் கட்டணமும் விரைவில் குறைகிறது. டொகோமோவை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விநாடி அடிப்படையிலான கட்டண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. எனினும், எஸ்எம்எஸ் கட்டணம் மட்டும் தேர்ந்தெடுத்த திட்டத்தைப் பொறுத்து 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உண்மையில் எஸ்எம்எஸ் டெலிவரி செய்ய போன் நிறுவனத்துக்கு ஒரு பைசாவுக்கு குறைவான செலவே ஆகிறது. எனவே, எஸ்எம்எஸ் கட்டணம் முழுவதும் போன் நிறுவனத்தின் வருமானம்தான். அத்துடன், போன் பேச விநாடி அடிப்படையில் கட்டணம் வந்து விட்டதால், எஸ்எம்எஸ் அனுப்புவது பெருமளவு குறைந்து விட்டது. அனுப்ப வேண்டிய தகவலை போன் செய்தே சுருக்கமாக கூறி விடுவதை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால், எஸ்எம்எஸ் கட்டணத்திலும் போட்டியைத் தொடங்க போன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. புதியதாக வரவுள்ள நிறுவனங்களுக்கு முன்னதாக முந்திக் கொள்ள பழைய நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. எனவே, எஸ்எம்எஸ் கட்டணமும் ஒரு பைசா முதல் 10 பைசாவுக்குள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லே ஆஃப்... அதிர்ச்சியில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

0 comments


விண்டோஸ் 7 வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஆட்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த வார இறுதிக்குள் மேலும் 1200 ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்த மைக்ரோசாப்ட், படிப்படியாக அதைச் செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் மேலும் சில ஊழியர்களை நீக்குவதாக நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.

இன்றைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இப்போதைய புதிய ஆட்குறைப்பில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களே எனத் தெரிய வந்துள்ளது.

இன்னொரு பக்கம் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் குறைந்த அளவு பணியாளர்களை புதிதாக நியமிக்கிறது மைக்ரோசாப்ட். ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஊழியர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவேயாகும்.

உறுதி செய்த மைக்ரோசாப்ட்:

இந்நிலையில் பணியாளர் நீக்கம் குறித்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுவரை 800 பேர் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிப் பட்டியலில் இன்னும் கூடுதலான பணியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இன்று வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி நிலவரப்படி 91 ஆயிரம் நேரடி பணியாளர்கள் மைக்ரோசாப்டில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

Related Posts with Thumbnails