Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Tuesday, February 2, 2010

பாகிஸ்தானில் இருந்து செல்போனில் மிஸ்டுகால்

1 comments

பாகிஸ்தானில் இருந்து செல்போனில் வரும் மிஸ்டு கால்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி வாடிக்கையாளர்களை வோடபோன், ஏர்டெல் செல்போன் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

சர்வதேச போன் அடையாள எண் +92ல் பாகிஸ்தானைச் சேர்ந்தது. இந்த எண்ணுடன் பல வாடிக்கையாளர் களுக்கு மிஸ்டு கால்கள் வருவதாக தகவல் வந்துள்ளது. வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது வோடபோன். எனவே, +92 என்ற எண்ணில் தொடங்கும் மிஸ்டு கால் வந்தால் மீண்டும் அழைக்க வேண்டாம். அழைப்பாக வந்தாலும் தனிப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.

லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்ததாக எஸ்எம்எஸ், மிஸ்டு கால் மூலம் பலருக்கு பாகிஸ்தானில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. பரிசைப் பெற தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதுபோன்ற அழைப்புகள், எஸ்எம்எஸ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். +92 என்பதை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பாகிஸ்தான் விஷமிகள் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது முதல்முறையல்ல.

ஒரு மாதம் முன்புதான் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நுகர்வோர் சேவைப் பிரிவில் இருந்து அழைப்பதாக கூறி மோசடி நடந்தது. இதுபற்றி புகார் வந்ததும் வாடிக்கையாளர்களை ஏர்டெல்லும் எச்சரித்து இருந்தது.

முதல்முறையாக 3டியில் விளையாட்டுப் போட்டி நேரடி ஒளிபரப்பு

1 comments

உலகிலேயே முதல் முறையாக 3டி தொழில்நுட்பம் மூலம் கால்பந்து விளையாட்டு போட்டி லண்டனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விளையாட்டு அரங்கில் அமர்ந்து பார்ப்பதை விட 3டியில் பார்ப்பது மிகவும் 'த்ரில்லிங்'ஆகவும், தத்ரூபமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.

ஆர்சினல் மற்றும் மான்செஸ்டர் இடையிலான இந்த போட்டியை சமீபத்திய 3டி தொழில்நுட்பம் மூலம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது 'பப்'களில் இந்த ஒளிபரப்பை வழங்கியது.

ஸ்கையின் முழுநீள 3டி சேனல் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக வடக்கு லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் இருந்து இந்த போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு குழுக்களுடன் 2 ஒளிபரப்பை ஸ்கை வழங்கியது. வழக்கமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களுக்கு எப்போதும் போல ஒரு ஒளிப்பதிவும், 3டிக்கு என பிரத்தியேக ஒளிப்பதிவும் செய்யப்பட்டது.

இதற்கென கமென்டரி, கேமரா, புரெடக்ஷன் உள்ளிட்ட குழுக்கள் தனித்தனியாக இயங்கின. ஆலன் ஸ்மித் மற்றும் ஆலன் பாரி ஆகியோர் கால்பந்து விளையாட்டின் நேரடி 3டி ஒளிப்பரப்பு சேவையின் முதல் வர்ணணையாளர்கள் என்ற பெருமையை பெற்றனர்.

Sunday, January 31, 2010

எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி

0 comments

கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14 மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சு செய்தால் போதும். தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை பதிவாகும். தட்டச்சு செய்யப்படும் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும். உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால் தமிழில் கமல் என வரும். இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை கூகுள் இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை. ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.

Wednesday, January 27, 2010

'தமிழ்நேஷன்' மூடப்பட்டது

0 comments
தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது.

நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூட, தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிர, தமிழரின் தொன்மைச் சிறப்பு, இலக்கிய வரலாறு, தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுரையாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்...' என்ற கனியன் பூங்குன்றனார் கவிதையைச் சொல்லி தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது தமிழ்நேஷன்.

காரணம்???????

Monday, January 25, 2010

சீன வைரஸ் பரவல்-தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

0 comments
கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

-தட்ஸ் தமிழ்

Friday, January 22, 2010

சென்னை: நோக்கியா ஊழியர்கள் போராட்டம்????????

0 comments
நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

70 ஊழியர்களை திடீரென்று நிர்வாகம் நீக்கிவிட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பூந்தமல்லியை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நோக்கியா தொழிற்சாலை. இதில் சுமார் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 பேரை அண்மையில் எந்தவித காரணமும் இன்றி நோக்கியா நிர்வாகம் பணிநீக்கம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அந்த நிறுவன வளாகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமலிங்க ராஜூ: ஒரு 'ஐடி ராஜாவின்' எழுச்சியும் வீழ்ச்சியும்

0 comments

தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியையே உண்டாக்கியவர் ராமலிங்க ராஜு.

சத்யம் என்ற நிறுவனத்தை சர்வ சாதாரணமாகத் துவங்கிய ராஜு, மிகக் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் 'ப்ளூ சிப்' நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். மிகச் சில வருடங்களில் 2 பில்லியன் டாலர் நிறுவனமாக சத்யம் உருவானது ராஜுவின் அபார திறமையால்தான். சொல்லப் போனால் அவருக்கு நிகரான ஒரு கார்ப்பரேட் நிர்வாகியே இல்லை என்கிறார்கள்.

ராஜுவின் குடும்பத் தொழில் ரியல் எஸ்டேட் தான். அதனால்தான் சத்யம் என்ற ஐடி நிறுவனத்தைத் துவங்கிய பிறகு அவர் மேடாஸ் இன்ப்ரா என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் துவங்கினார். சத்யம் நிறுவனத்தின் நிதியை இந்த மேடாஸுக்கு அவ்வப்போது மாற்றினார்.

இன்னொரு பக்கம் சத்யம் நிறுவனப் பங்குகளின் விலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, இல்லாத லாபத்தை உருவாக்கிக் காட்டினார்.

2008ம் ஆண்டில் உலகம் முழுக்க ஐ.டி நிறுவனங்கள் பெரிதாக அடிவாங்க, அந்த நேரத்திலும் போலி லாபம் காட்டவும், சத்யம் நிறுவன பணத்தை மேடாஸுக்கு மாற்றவும் அவர் முயன்ற போதுதான் மாட்டிக் கொண்டார்.

அதுவரை அவரைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுதி பெரும் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மீடியா, அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து அந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கியது.

பின்னர் எத்தனையோ கதைகள்... ஆதாரங்கள் ராஜுவைப் பற்றியும், ராஜுவுக்கு எதிராகவும்...

ஆனால்- இவற்றுக்கெல்லாம் அப்பால், 5 கண்டங்களில் 66 நாடுகளில் சத்யம் என்ற ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ராஜு உருவாக்கியிருந்த விதம், அதில் அவர் காட்டிய முனைப்பும் வேகமும் ஒவ்வொரு தொழிலதிபரும், இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம்.

அவரது மேடாஸ் நிறுவனம் நிறுவனம் பற்றி பல்வேறு மாறுபட்ட செய்திகள் உலா வந்தாலும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அந்த நிறுவனம் வென்ற விதம் வளரும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

ராஜு பெற்ற அபார வெற்றியின் பின்னணி... அவரது வீழ்ச்சிக்கான காரணங்கள்... நிறுவனச் சட்டங்களை அவர் தனக்கு சாதகமாக வளைத்த விதம், நிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள் கண்களை மறைத்து அவர் செய்த பிஸினஸ் ஜாலங்கள்... இவை அனைத்தையும் இப்போது 'The Double Life Of Ramalinga Raju!' என்று ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் கிங்ஷக் நாக்.

இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ரெஸிடென்ட் எடிட்டர் ஆவார்.

ராஜூவைப் பற்றி இதுவரை மீடியாவில் வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கலக்கலாய் எழுதியிருக்கிறார் நாக்.

முழுசாகப் படிக்க இந்த புத்தகம் ஆன்லைனிலும் விலைக்குக் கிடைக்கிறது.

Tuesday, January 19, 2010

யுனிநார் வாடிக்கையாளர் ஒரே மாதத்தில் 12 லட்சம்

0 comments

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சேவைகளைத் துவக்கிய யுனிநார் 2010 ஜனவரிக்குள் அகில இந்திய அளவில் 12 லட்சத்திறகும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை 2லட்சத்து 2ஆயிரமாக உள்ளது என யுனிநார் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.


ஒரு நிமிடத்திற்கு லோக்கல் காலுக்கு 29 பைசாவும் எஸ்டிடி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு 49 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 3ம் தேதி உ.பி (மேற்கு), உ.பி (கிழக்கு), பீகார், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் யுனிநார் சேவை தொடங்கியது. அதன் ஜி.எஸ்.எம் சேவை ஜனவரி மாத இறுதியில் துவக்கப்பட உள்ளது.


கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் மட்டும் தமிழ்நாடு வட்டத்தில் 2 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்களும் இந்திய அளவில் 12 லட்சத்துக்கு கூடுதலாகவும் சந்தாதாரர்கள் உள்ளனர்.

Thursday, January 7, 2010

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியேற திட்டம்

0 comments

தெலங்கானா பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டுள்ளன.


ஆந்திராவின் ஐதராபாத்தில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா மற்றும் எச்சிஎல் ஆகிய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


இதனால் கடந்த ஒன்றரை மாதமாக ஐ.டி.தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் அலுவலகங்களை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து அந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.


"ஐதராபாத்தில் செயல்படும் டாப் 5 ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரில் வாடகைக்கு அலுவலகம் வேண்டும் என கேட்டுள்ளன" என ஸ்ரீராம் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார்.


"இரண்டு ஐடி நிறுவனங்கள் 100 அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தமாக லீசுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளன" என அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு தெரிவித்தார்.

Thursday, December 31, 2009

ஜாம்டெல்லை வாங்க பிஎஸ்என்எல் முயற்சி

1 comments


ஜாம்பியாவின் அரசு தொலைபேசி நிறுவனமான ஜாம்டெல்ஸை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்.

ஜாம்டெல் தனது 75 சதவிகித பங்குகளை விற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்கள் அதை ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன.

இதில் இறுதி ஏலதாரர்களாக இந்திய அரசின் பிஎஸ்என்எல், அங்கோலாவின் யுனிடெல், லிபியாவைச் சேர்ந்த லாப் கிரீன்காம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு இந்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல்லும் இதற்கு முயற்சித்தது. ஆனால் இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டது.

ஏலத்துக்குப் பிறகு ஜாம்டெல் நிறுவனத்தின் 75 சதவிகித பங்குகள் எந்த நிறுவனத்துக்கு தரப்படும் என்பதை வரும் ஜனவரி 11-ம் தேதி ஜாம்பியா அரசு அறிவிக்கிறது.

Tuesday, December 29, 2009

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்

0 comments

இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Monday, December 28, 2009

3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது

0 comments

3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆண்டு சம்பளம் 1 டாலர்

0 comments

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009-ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.

உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார்.

இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள்.

ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.

Saturday, December 26, 2009

மைக்ரோசாப்ட்டுக்கு ரூ.1,363 கோடி அபராதம்

0 comments
காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.


‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 நன்றி: - தினகரன்

Tuesday, December 22, 2009

ஜனவரி 14-ல் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

0 comments

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கப்போகிறதாம்.  இதனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா இன்று டில்லியியில் அறிவித்துள்ளார்.

3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத்  மத்திய அரசு திட்டமிட்டு, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படவும் , ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு வை(eGoM) மத்திய அரசு அமைத்துள்ளது.

தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கால அவகாசம் கோரியிருந்தது .

இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.

இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Monday, December 21, 2009

பிரிட்டனில் வரி ஏய்ப்பு செய்ததாக கூகுள் மீது புகார்

0 comments

வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.

இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.

"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.

காப்புரிமை மீறிய கூகுளுக்கு தினமும் ரூ.6.7 லட்சம் அபராதம்

0 comments
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.

காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.

இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.

Sunday, December 20, 2009

200 வைரங்கள் பதித்த செல்போன் ரூ.15 கோடி

0 comments

உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனை இங்கிலாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 200 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அதன் விலை ரூ.14.7 கோடி. லிவர்பூலைச் சேர்ந்த தங்க நிறுவனம் கோல்டு ஸ்டிரைக்கர் இன்டர்நேஷனல். அதன் ஆர்டரின் கீழ் ஸ்டாட் ஹியூஜஸ் என்ற நிறுவனம், உலகின் விலை உயர்ந்த செல்போனை தயாரித்துள்ளது. 3ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த ஐபோனில் 200 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முற்றிலும் 22 காரட் தங்கத்தில் தயாரானது. முன்பக்கத்தில் 136 வைரங்களும், 53 வைரங்களில் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போனை தயாரிக்க 10 மாதங்கள் ஆகின. 7 கிலோ எடை கொண்ட உறுதியான கிரானைட்பேக்கிங்கில் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது. கிரானைட் கற்களில் உலகின் மிகத் தரமானதாக காஷ்மீர் கோல்டு கிரானைட் கருதப்படுகிறது. அதில் இந்த பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

Thursday, December 17, 2009

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கும் பார்தி ஏர்டெல்

2 comments


பங்களாதேஷ் நாட்டின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.

அபு தாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பங்களாதேஷ் மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பார்தி ஏர்டெல்.

வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பார்திக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி பங்களைதேஷ் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.

கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பார்தி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை பங்களாதேஷில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது.

வாரிட் நிறுவனம் 2007-ல் பங்களாதேளஷில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

பார்தி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, பங்களாதேஷ் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இப்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Wednesday, December 16, 2009

700 பேரை நீக்கும் டெல் நிறுவனம்

0 comments


கம்ப்யூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல் நிறுவனம் தனது மலேஷிய கிளையில் 700 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த கிளையில் 4,500 பணியாளர்கள் உள்ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேட்டஸ்ட் பாம் டாப் (Palm top) இங்கு தயாரிக்கப்படுகின்றன.

உலகமெங்கும் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கு நல்ல தேவை இருந்தாலும், சமீப காலமாக டெல் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. சர்வதேச மந்தத்தை சமாளிக்க முடியாத நிலையில் பல செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.

நிலைமையைச் சமாளிக்க வரும் ஜூலைக்குள் 700 ஊழியர்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல் நிறுவனத்தின் பினாங் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். ஜனவரி தொடங்கி ஜூலைக்குள் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் பேகம் அறிவித்துள்ளார்.

மேலும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Related Posts with Thumbnails