Thursday, November 5, 2009

போன் எண்ணிக்கை 50 கோடியாக உயர்வு

நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு இறுதிக்கான இலக்கு 15 மாதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. செல்போன், லேண்ட்லைன் உட்பட அனைத்து வகை போன் இணைப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 50 கோடியாக அதிகரிக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 30ம் தேதியே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது 15 மாதங்கள் முன்னதாக நடந்துள்ள சாதனை. ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக இருந்தது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை 50 கோடியே 90 லட்சமாக அதிகரித்தது. இது 3.03 சதவீத உயர்வு. அதன்மூலம், இப்போது 50 கோடிக்கு மேற்பட்டோரிடம் போன் உள்ளது. நாட்டின் 120 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100 பேருக்கு 43 பேரிடம் இப்போது போன் உள்ளது. அதில் 40 பேரிடம் செல்போன் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் செல்போன் நிறுவனங்கள் 1.51 கோடி புதிய இணைப்புகளை அளித்துள்ளன. அதிக செல்போன் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 2வது இடம் வகிக்கிறது. சீனாவில் 60 கோடி பேருக்கு மேல் போன் இணைப்பு வைத்துள்ளனர். விநாடி அடிப்படையில் கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது அறிவித்துள்ளதால் போன் இணைப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails